ராமநத்தம் அருகே கிராம பெண் உதவியாளரிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ராமநத்தம் அருகே கிராம பெண் உதவியாளரிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

ராமநத்தம் அருகே கிராம பெண் உதவியாளரிடம் 3 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள புலிகரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 32). இவர் புலிகரம்பலூர் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்றார். பின்னர் கூட்டம் முடிந்ததும் தனது ஸ்கூட்டரில் புலிகரம்பலூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நகை பறிப்பு

வாகையூர் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர்.

அவர் தனது நகையை ஜாக்கெட்டுடன் சேர்த்து 'சேப்டி பின்' அடித்திருந்ததால் நகையின் ஒரு பகுதி அறுந்து கீழே விழுந்தது. உடனே மர்மநபர்கள் தங்கள் கையில் சிக்கிய நகையுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜலட்சுமி நகையுடன் சேப்டி பின் அடித்திருந்ததால், அவர் அணிந்திருந்த 8 பவுன் எடை கொண்ட 2 தங்க சங்கிலி தப்பியதும், 3 பவுன் மட்டும் பறிபோனதும் தெரியவந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் கிராம உதவியாளரிடம் மர்மநபர்கள் நகையை பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story