மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது - அமைச்சர் செந்தில் பாலாஜி


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 28 Feb 2023 6:23 AM GMT (Updated: 28 Feb 2023 9:06 AM GMT)

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்.

சென்னை,

தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ஆம் தேதி எனக் கூறப்பட்ட நிலையில், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இன்று மாலைக்குள் மின் - ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.


Next Story