சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு


சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
x

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த 1-ந்தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. 18-ந்தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியை செலுத்தி உள்ளனர்.

2-ம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 15.10.2022-க்குள் சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சட்ட விதிப்படி, தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி, அதாவது அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். எனினும், சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 2 சதவீத தனிவட்டியை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story