விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு - அண்ணாமலை இரங்கல்


விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு - அண்ணாமலை இரங்கல்
x
தினத்தந்தி 28 Dec 2023 4:21 AM GMT (Updated: 28 Dec 2023 4:33 AM GMT)

கேப்டன் விஜயகாந்த் பாசாங்கில்லாத மனிதர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.

தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.

கேப்டன் விஜயகாந்த் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். கேப்டன் விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story