பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; உயர் அதிகாரி மீது வழக்கு


பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; உயர் அதிகாரி மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Oct 2023 4:00 PM GMT (Updated: 12 Oct 2023 4:00 PM GMT)

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த உயர் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை

சென்னை ராயபுரம், கல்லறை சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு திருமணமான 33 வயது இளம்பெண், இளநிலை அதிகாரியாக உள்ளார். இவர், கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அதே அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் ஜமீன்பல்லாவரத்தை ேசர்ந்த ஒருவர், பாலியல் ரீதியாக பெண் அதிகாரிக்கு தொல்லை கொடுத்தார். இதனை கண்டித்தும் அதிகாரியின் தொல்லை எல்லை மீறியது.

இதனால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி, வீட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார். இதற்கிடையில் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியின் மனைவி, தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவரது மகள் மற்றும் தாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த உயர் அதிகாரி மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அதிகாரியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.


Next Story