திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு - பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை


திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு - பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
x

கும்பாபிஷேக விழாவுக்கு முன்னர், திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, வாசற்கால் தூண்கள் தேர்வு செய்யப்பப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழ்வது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் முருகன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்து அறநிலையத்துறை அனுமதியுடன் துவங்கப்பட்டது. 2011-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2017-ம் ஆண்டில் ராஜகோபுர பணி மீண்டும் துவங்கியது. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் நிறைவடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இதனை அடுத்து கோபுரம் நுழைவு வாயிலில் கல் தூண் அமைக்கும் பணி மற்றும் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் செலவில் 56 படிகள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் படி பாதைகளை மண் நிரப்பி சமன் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. பின்னர் அடுத்தக்கட்டமாக படிகள் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது:-

முருகன் கோவிலின் 9 நிலை இராஜகோபுரத்தின் இருபுறமும் 30 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கருங்கற்கலால் ஆன வாசற்கால் தூண்கள் நன்கொடை மூலம் கடந்தாண்டு மலைக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுப்படி வாசற்கால் தூணிண் உறுதித் தன்மை குறித்து அண்ணா பல்கலைக்கழக கட்டிட வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கல் தூணின் உறுதி தன்மையில் சில ஐயப்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கல்தூண் ராஜகோபுரத்தில் பொருத்தப்படவில்லை.

இதனையடுத்து சோளிங்கர் அருகே உள்ள பொன்னை பகுதியில் ராஜகோபுரத்தின் நுழைவுப் பகுதியில் பொருத்துவதற்கு தேவையான வாசற்கால் தூண் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில தினங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த கல் தூணை வல்லுனர் குழு ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்தவுடன் மலைக் கோவிலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

மேலும் அறநிலைத்துறை அமைச்சரின் உத்தரவின் படி மாஸ்டர் பிளான் திட்டத்தில் ராஜகோபுரத்தையும் தேர்வீதினை இணைக்கும் பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முருகன் கோவில் ராஜகோபுரத்தின் பணிகள் இந்தாண்டிற்குள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை உள்ளது.


Next Story