மத்திய இணை மந்திரி எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு


மத்திய இணை மந்திரி எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
x

தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது, வேலூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், அதற்கான மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா? என்றும் பேசினார்.

அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த 31ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தற்போது தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் முருகன் மீதான வழக்கை இன்னும் 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story