'நீட்' தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே நோக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நீட் தேர்வால் கல்வி உரிமை மறுப்பு; புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பே நோக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

இந்தி திணிப்பே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று திருவனந்த புரத்தில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

2-வது நாளான நேற்று'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள்' என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்கள் கானம் ராஜேந்திரன் (கேரளா), முத்தரசன் (தமிழ்நாடு), தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒரே கொள்கைக்காரர்கள்

திராவிட இயக்கத்துக்கும், கம்யூனிஸ்டு இயக்கத்துக்குமான நட்பு என்பது 2 இயக்கங்களும் தோன்றிய காலத்திலேயே உருவான நட்பு ஆகும். திராவிட இயக்கம் உருவாகவில்லை என்று சொன்னால், நான் கம்யூனிஸ்டு இயக்கத்தில்தான் இருந்திருப்பேன் என்று சொன்னவர் கருணாநிதி. அது மனப்பூர்வமாக சொன்னது என்பதன் அடையாளம்தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியது.

நாம் ஒரே கொள்கைகாரர்கள் என்பதால்தான், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.

இது கேரளாவில் நடக்கக்கூடிய மாநாடாக இருந்தாலும், இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி உருவாக வேண்டும் என்பதும், மாநிலத்தில் சுயாட்சி மலர வேண்டும் என்பதும், இந்தியா முழுமைக்குமான கருத்தியல்.

'நீட்'டால் உரிமை மறுப்பு

இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை,சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும். இந்திய அரசியலமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையான, முழுமையான கூட்டாட்சி தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுகிற வரையில் நாம் நமது முழக்கத்தையும், செயலையும் தொடர்ந்து செய்தாக வேண்டும்.

மாநில சுயாட்சியை உருவாக்குவதற்காக ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பற்றிய மறு ஆய்வுக்கு வழிகாட்டியவர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா தனது இறுதி கடிதத்தில் வலியுறுத்தியது, மாநில சுயாட்சி கொள்கையைத்தான். இதனைத்தான் அண்ணாவின் உயிலாக நாங்கள் கருதி கொண்டிருக்கிறோம்.

தற்போது மாநில அதிகாரங்களையும், மடைமாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. 'நீட்' போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.

புதிய கல்விக்கொள்கை

தேசிய (புதிய) கல்விக்கொள்கை என்பது கல்வியை பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது.

அதனை காவிக்கொள்கையாக, இந்திய மொழியை திணிக்கும் கொள்கையாக, இந்தி மொழியை திணிக்கும் கொள்கையாக வடிவமைக்கிறார்கள் என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை. மாநில அரசாங்கம் தனது சிந்தனை வகைப்பட்ட கல்வியை தருவதை தடுக்கிறார்கள் என்பதற்காக தடுக்கிறோம்.

இரட்டை ஆட்சி

கவர்னர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. நமக்கான உரிமையை நிலைநாட்ட கடிதம் அனுப்பினால் அதற்கான பதில் கூட மத்திய அரசிடம் இருந்து நமக்கு வருவது இல்லை. வெறும் கையை பிசைந்து கொண்டு மாநிலங்கள் நிற்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் இப்படி எல்லாவற்றையும் ஒரே... ஒரே... ஒரே...என்று 'கோரஸ்' பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால், ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது.

நாடு முழுவதும் எதிரொலிக்கும்

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால், இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கிய அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் மந்திர சொற்கள்தான் கூட்டாட்சி, மாநில சுயாட்சி ஆகியவை. இவை இரண்டுக்கும் குந்தகம் ஏற்படுத்துபவர்களை இந்தியாவின் எதிரிகள் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்கள் அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொண்டவர்களால் கேட்கப்படுவதுதான் மாநிலத்தில் சுயாட்சி.

மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு-கேரளா மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தென்னகத்தில், திருவனந்தபுரத்தில் ஒலிக்கும் இந்த ஒற்றுமை குரல் - இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கும் காலம் நெருங்கிகொண்டு இருக்கிறது. அந்த காலம் இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சியை உருவாக்கும் காலமாக அது அமையும். அனைத்து மாநிலங்களுக்குமான விடிவுகாலமாக அது அமையும். அதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இந்த மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story