செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. பிரியாணி விருந்து


செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. பிரியாணி விருந்து
x

மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல், அவர்கள் ஓட்டல்களில் இருந்து போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும் பஸ்கள், போட்டி நடைபெறும் ஓட்டல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார். நல்ல முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தமிழக போலீசுக்கு சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்று கொடுத்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் புகழாரம் சூட்டி பேசினார்.

பிறகு அனைத்து போலீசாருக்கும் மட்டன் பிரியாணி விருந்து வழங்கி அவர்களுடனே அமர்ந்து சாப்பிட்டார். இதில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story