தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

போக்குவரத்திற்கு இடையூறு

விருதுநகர் மாவட்டம் மருளுத்து செல்லும் பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதுடன் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வக்குமார், மருளுத்து.

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவிற்கு தினமும் எண்ணற்ற பேர் வந்து செல்கின்றனர். பூங்காவில் உள்ள நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தேவையற்ற செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே நடைபாதையை சீரமைக்கவும், தேவையற்ற செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?

சக்தி ஆனந்த், சாத்தூர்.

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணக்குமார், செட்டியார்பட்டி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மல்லிகிட்டங்கி தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என அனைவரும் நாய்களின் தொல்லையால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஜெயச்சந்திரன், பாண்டியன் நகர்.

பஸ் வசதி

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆதலால் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

பொதுமக்கள், ஆலங்குளம்.


Next Story