சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க நவீன வசதிகளுடன் கூடிய அறை - இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார்


சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க நவீன வசதிகளுடன் கூடிய அறை - இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார்
x

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க நவீன வசதிகளுடன் கூடிய ‘கேப்சூல்’ தங்கும் அறைகளை இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் கண்வேயா் பெல்ட்-1 அருகே பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானத்தில் செல்லும் பயணிகள், வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்து பிற நகரங்களுக்கு செல்ல காத்திருக்கும் பணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க அதிநவீன வசதிகள் கொண்ட 'கேப்சூல்' தங்கும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது சோதனை அடிப்படையில் 4 'கேப்சூல்' தங்கும் அறைகள் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. குறுகிய நேர ஓய்வுக்காக இந்த அறைகள் தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த தங்கும் அறைகளுக்கு முதல் 2 மணி நேரத்துக்கு ரூ.600 கட்டணம் என்றும், அதன்பிறகு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.250 என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு தங்கும் அறையில் ஒரு பயணியும், 12 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த படுக்கை அறைக்குள் பயணிகளின் உடைமைகளை வைக்கும் இடம், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, புத்தகம் படிப்பதற்கான விளக்கு வசதி, ஏ.சி.யை கூட்டி, குறைப்பதற்கான வசதிகள் என நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒரு விமானத்தில் வந்துவிட்டு மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய உள்ள பயணிகளுக்கு இந்த தங்கும் அறைகளில் முன்னுரிமை வழங்கப்படும். அந்த பயணிகள் யாரும் கேட்கவில்லை என்றால் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆனால் விமான பயணிகள் அல்லாதவர்களுக்கு இங்கு இடம் கொடுக்கப்படமாட்டாது. விமான பயணிகள் அவர்களுடைய விமான டிக்கெட், போர்டிங் பாஸ் பி.என்.ஆர். எண்ணை வைத்து முன்பதிவு செய்ய முடியும்.

சோதனை அடிப்படையிலான 4 படுக்கைகளுடன் கூடிய இந்த புதிய 'கேப்சூல்' தங்கும் அறைகளை சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார். பயணிகளிடம் உள்ள வரவேற்பை பொறுத்து இந்த தங்கும் அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story