அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 July 2023 12:00 AM GMT (Updated: 7 July 2023 2:45 AM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

பாராட்டு விழா

திருச்சி துவாக்குடியில் உள்ள பாய்லர் ஆலை நிறுவன வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.

விமான நிலையத்தில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து அவர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதற்காக அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு துணை நிற்போம்

ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கிறது. அதற்காக வெளியிட்ட இலச்சினையில் ஜல்லிக்கட்டு வீரர் காளையை அடக்குவது போன்ற படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரரையும் கவுரவப்படுத்துகிறோம். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரையும் பாராட்டுகிறோம். அ.தி.மு.க.வை பொறுத்தவரை பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெற துணை நிற்போம்.

கிடப்பில் போட்டுவிட்டனர்

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டத்துக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணியை நான் தொடங்கி வைத்தேன். தற்போது அந்த பணியையும் கிடப்பில் போட்டு விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள். நிச்சயம் அனைவரது ஒத்துழைப்போடு, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். அப்போது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணியை தொடங்கி வைப்போம். அது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. அரசே அந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றி பசுமை புரட்சியை ஏற்படுத்துவோம்.பருவகாலங்களில் பெய்கிற மழைநீர் வீணாகாமல் தேக்குவதற்காக ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டன. குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்றி வண்டல் மண்ணை விவசாயிகளிடமே கொடுத்தோம். இவையெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு கொண்டு வந்த அற்புதமான திட்டம். தற்போது இன்றைய ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள், கேடயம் உள்ளிட்ட பல்வேறு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு

பின்னர் மாலை துவாக்குடியில் பாய்லர் ஆலை நுழைவு பகுதியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் 7 அடி உயரமுள்ள முழுஉருவ வெண்கல சிலை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.


Next Story