கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கோவை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கொடிசியாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.790.42 கோடி மதிப்பீட்டில் 5,936 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.229.84 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,115 பணிகளை திறந்து வைத்தார். இது தவிர பல்வேறு துறை சார்பில் 25 ஆயிரத்து 42 பேருக்கு ரூ.368.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

நலத்திட்ட உதவிகள்

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் ஒரு தி.மு.க எம்.எல்.ஏ. கூட இல்லையே என்று எல்லோரும் நினைத்தோம். கோவையை இந்த அரசு புறக்கணித்துவிடும் என்றும் பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் பொய் என்று சொல்லும் அளவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நிரூபித்துள்ளனர்.

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றது முதல் கோவையில் 3 அரசு நலத்திட்ட விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் ரூ.1,089 கோடியில் 1,413 முடிவுற்ற பணிகளும், ரூ.1,540 கோடியில் 6,800 புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு ரூ.1,600 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிக நலத்திட்டங்கள் பெற்ற மாவட்டம் கோவை மாவட்டம். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

செல்லப்பிள்ளை

எதிர்க்கட்சியாக இருந்தாலும், பா.ஜ.க.வாக இருந்தாலும், வாட்ஸ்-அப்பில் பொய் செய்தி பரப்புவராக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த அரசு உள்ளது. அவர்களின் பொய் பிரசாரங்களை முறியடித்து கோவைக்கு அதிக நலத்திட்டங்களை தி.மு.க. அரசு செய்துள்ளது. கோவை மாவட்டத்திற்கு மட்டும் இவ்வளவு நலத்திட்டம் என்றால் மாநிலம் முழுவதும் எவ்வளவு நலத்திட்டங்களை இந்த அரசு செய்து இருக்கும். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர்கள் காதுகளில் இந்த திட்டங்கள் சென்றடைய வேண்டும். சென்னைக்கு அடுத்த இடம் கோவை என்றார்கள். சென்னைக்கு சமமாக அல்லது சென்னையை விட உயர்வாக கோவையை செந்தில் பாலாஜி உயர்த்துவார்.

கலைஞரின் பேரன், முதல்வரின் மகன், அமைச்சர் என எத்தனை பெருமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதைதான் பெருமையாக கருதுகின்றேன். பொறுப்பான செல்ல பிள்ளையாக இருப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story