எம்.ஜி.ஆர் குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி


எம்.ஜி.ஆர் குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி
x

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இருந்தாலும் மறைந்தாலும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும், என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பதுதான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை, அவர் பேசிய பாணியில், அவரைப்போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த தி.மு.க. அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது .

இந்த தி.மு.க. ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில்தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.

வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட தி.மு.க.வினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதேபோல, இனிவரும் காலங்களிலும் தி.மு.க.வினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்."கல்லை வடித்தால் அது வெறும் சிலை - அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story