நிபா வைரஸ் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு


நிபா வைரஸ் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:46 PM GMT)

கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் குமரி எல்லையில் 2-வது நாளாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் குமரி எல்லையில் 2-வது நாளாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

நிபா வைரஸ் பரவல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கு உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தடுப்பு முகாம் அமைத்துள்ளனர். அந்த வகையில் களியக்காவிளை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் சுகாதார அதிகாரிகள் கேரளாவில் இருந்து வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.

2-வது நாளாக பரிசோதனை

இந்தநிலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று 2-வது நாளாக கேரளாவில் இருந்து வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சளி மற்றும் காய்ச்சல் உள்ளதா? என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முகாமில் 3 ஷிப்டுகளாக அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதாவது ஒவ்வொரு ஷிப்டிலும் ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஷிப்டு முறையில் பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story