தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்..!


தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்..!
x

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

செங்கல்பட்டு,

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்கள் என ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்காக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தென் மாவட்டங்களை நோக்கி செல்கின்ற வாகனங்களுக்காக காத்திருக்கின்றனர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிரம்பி வழிவதால் பஸ்சில் ஏற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து பஸ்களிலும் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிகள் செல்கின்றனர். இந்த நேரத்தை பயன்படுத்தி சரக்கு வாகனங்களும் மக்களை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இருந்து விழுப்புரம் வரை செல்வதற்கு சுமார் ரூ.150 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இது போன்ற பண்டிகை காலங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story