தீராத வயிற்று வலி: பிளேடால் வயிற்றை கிழித்து மூதாட்டி தற்கொலை - நெல்லையில் சோகம்


தீராத வயிற்று வலி: பிளேடால் வயிற்றை கிழித்து மூதாட்டி தற்கொலை - நெல்லையில் சோகம்
x

பிளேடால் வயிற்றை கிழித்து மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே மேலக்கூனியூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சம்மாள் (வயது 67). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

இதனால் துரைப்பாண்டி-பிச்சம்மாள் தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிச்சம்மாள் கடந்த சில ஆண்டுகளாக குடல் இறக்கம் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதன் காரணமாக அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

சம்பவத்தன்று பிச்சம்மாளுக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலியால் துடித்த அவர் வீட்டில் இருந்த பிளேடால் தனது வயிற்றை தானே கிழித்து கொண்டார். இதனால் ரத்தம் பீறிட்டதால் மயங்கி விழுந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பிச்சம்மாளை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு பிச்சம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி பிளேடால் வயிற்றை கிழித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story