ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு..


ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு..
x
தினத்தந்தி 1 Jan 2024 2:27 AM GMT (Updated: 1 Jan 2024 8:00 AM GMT)

வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

ஆங்கில புத்தாண்டான 2024-ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வளமாக்க வேண்டி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதிகாலையிலேயே திரளாள பக்தர்கள் குவிந்துள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

திருத்தணி முருகன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், கைலாசநாதர் கோவில் மற்றும் ராமநாதபுரம் ராமநாத சாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர்.


Next Story