எண்ணூர் அனல் மின் நிலைய டெண்டர் விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


எண்ணூர் அனல் மின் நிலைய டெண்டர் விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்களுக்காக ரூ.4,442 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும், ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிடப்பட்டது.

இதனிடையே மனுதாரர் தரப்பில், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்ததற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.




Next Story