காரை நிறுத்த சொல்லியதால் ஆத்திரம்: சப்-இன்ஸ்பெக்டரை மதுபோதையில் தாக்கிய தனியார் நிறுவன மேலாளர்...!


காரை நிறுத்த சொல்லியதால் ஆத்திரம்: சப்-இன்ஸ்பெக்டரை மதுபோதையில் தாக்கிய தனியார் நிறுவன மேலாளர்...!
x

ஊட்டி அருகே மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

தேர் திருவிழாவின் போது காரை நிறுத்த சொல்லியதால் ஆத்திரம் அடைந்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் சிறப்பில் கூறப்படுவதாவது:-

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள மாதா ஆலய தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் தேரோட்டத்தை ஒட்டி ரோகினி சந்திப்பு பகுதியில் இருந்து காந்தல் செல்லும் வழியில் வந்த வாகனங்களை போலீசார் நிறுத்தினர்.

இதில் அந்த வழியாக வந்த ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த ஜான் எட்வின் (வயது 25) என்பவர் காரை நிறுத்தாமல் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜான் எட்வின் சப்-இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தரை தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் உடனடியாக அவரை மடக்கி பிடித்தனர். அப்போது ஜான் எட்வின் மது குடித்துவிட்டு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் எட்வினை கைது செய்தனர். கைதான ஜான் எட்வின் ஊட்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.


Next Story