கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவு - சீமான் இரங்கல்


கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவு - சீமான் இரங்கல்
x

கல்வெட்டு அறிஞர் செ.ராசு மறைவிற்கு சீமான் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு வயதுமூப்பு காரணமாக இன்று காலை 8 மணியளவில் கோவை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 85. இவர் 1938-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள். மனைவி கவுரி அம்மாள். அவருக்கு மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் செ.ராசு அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு!

முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் செ.ராசு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. ஈரோட்டில் தமிழாசிரியராக தமது பணி வாழ்வினைத் தொடங்கிய ஐயா செ.ராசு அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் குறித்து தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு அரும்பணி புரிந்த பெருமைக்குரியவர்.

ஓலைச்சுவடிகள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டதோடு, தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் தொல்லியல் அருங்காட்சியகம் நிறுவவும், ஆண்டுதோறும் மாணவர்களை தொல்லியல் சுற்றுலா அழைத்துச் செல்லவும் வழிகோலியவர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராகச் சிறப்புற செயலாற்றியவர்.

1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து தமிழர்களின் இசையறிவையும், கொடுமணம் அகழாய்வு மூலம் தமிழர்களுடன் ரோமானியர் கொண்டிருந்த தொடர்பைக் கண்டறிந்து நொய்யல் ஆற்றங்கரை நாகரீகமென உலகிற்கு வெளிப்படுத்திய புகழுக்குரியவர்.

தமிழ்ப்பண்பாடு, வரலாறு, சமயம், இலக்கியம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி தமிழன்னைக்கு அணி செய்த பெருந்தகை புலவர் செ.ராசு அவர்களின் இழப்பு தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

போற்றுதற்குரிய புலவர் செ.ராசு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!." இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story