"ஒருவனை நாட்டுக்காக இழந்தாலும் இன்னொருவனையும் அனுப்புவேன்" - மதுரை வீரரின் தந்தை உருக்கம்


ஒருவனை நாட்டுக்காக இழந்தாலும் இன்னொருவனையும் அனுப்புவேன் - மதுரை வீரரின் தந்தை உருக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2022 4:53 AM GMT (Updated: 12 Aug 2022 6:01 AM GMT)

இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்புவேன் என்று உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை தர்மராஜ் தெரிவித்தள்ளார்.

மதுரை,

காஷ்மீரில் ரஜோரி நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ வீரர்கள் ஆக்ரோஷ பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இ்ந்த சம்பவத்தில் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 24) என தெரியவந்தது.

லட்சுமணனின் சொந்த ஊர் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டி ஆகும். அவருடைய பெற்றோர் தர்மராஜ்-ஆண்டாள். இந்த தம்பதியின் மூத்த மகன் ராமர். இளைய மகன்தான் லட்சுமணன். ராமர், லட்சுமணன் இரட்டையர்கள் ஆவார்கள்.

தீவிரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவத்தை நேற்று மதியம் அவருடைய குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நாட்டிற்காக உயிர் நீத்தது பெருமையே என்று கூறிய அவரது தந்தை தர்மராஜ், இரண்டு மகன்களில் ஒரு மகனை நாட்டுக்காக கொடுத்தேன், அதேபோன்று இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.



Next Story