முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வீட்டில் பணியாற்றும் நர்சிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது


முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வீட்டில் பணியாற்றும் நர்சிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
x

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வீட்டில் பணியாற்றும் நர்சிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காவிரிப்பாக்கம் அபிராமபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 25). நர்சான இவர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வீட்டில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் காலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்போனில் பேசியபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர். இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அஞ்சலி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிப்பு காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அஞ்சலியின் செல்போனை பறித்து சென்றது ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த அகில் அகமது (21), முகமது அல்தாப் (21) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணையில் இவர்கள் 2 பேரும் கடந்த 9-ந்தேதி ராயப்பேட்டையில் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த ரோஷன் என்ற ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்ததும், இவர்கள் 2 பேர் மீதும் ஒரு கஞ்சா வழக்கும், அடிதடி வழக்கும் இருப்பதும் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story