வேலூரில் பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


வேலூரில் பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x

வேலூர் அருகே பணத்தகராறில் முன்னாள் ராணுவ வீரரை அடித்து கொன்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் அருகே உள்ள சந்தன கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 47), முன்னாள் ராணுவ வீரர். அவரது மனைவி ஜெயக்குமாரி.

இந்நிலையில் பூங்காவனம் கணியம்பாடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு பணம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டு முன்னோரம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கண்ணமங்கலம் செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி அருகே நின்றிருந்த பூங்காவனத்தை தேடி 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அப்போது போதையில் இருந்த பூங்காவனம் பணம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அருகில் கிடந்த மூங்கில் குச்சிகளை எடுத்து அவரது தலையில் பலமாக தாக்கினர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய பூங்காவனத்தை விரட்டிச் சென்று அடித்தனர். அவர் கீழே விழுந்தபோதும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ராணுவ வீரர் கொலையில் 6 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பணத்தகராறில் கொலை நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story