போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது


போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது
x

அம்பத்தூரில் போலி ஆவணம் மூலம் பெண்ணின் ரூ.5 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சூளை காளத்தியப்பா தெருவைச் சேர்ந்தவர் ராஜகுமாரி பக்கிரி. இவர், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் எனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை 2001-ம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த அடைக்கலம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து தனது மகன்களான ஆனந்தராஜ் (வயது 57), ஜான் டேவிட்குமார் (48) ஆகியோர் பெயருக்கு அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து உள்ளார். ரூ.5 கோடி மதிப்புள்ள எனது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் ஆவடி மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

விசாரணையில் ராஜகுமாரி பக்கரியிடம் அபகரித்த அந்த நிலத்தை ஆனந்தராஜ், ஜான் டேவிட்குமார் இருவரும் சேர்ந்து ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராபி ஜெயக்குமார் (43) என்பவருக்கு விற்றது தெரிய வந்தது. அவர் அந்த இடத்தை கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு விற்று உள்ளார். இவ்வாறு ராஜகுமாரி பக்கிரிக்கு தெரியாமல் 12-க்கும் மேற்பட்டவர்களுக்கு அவரது நிலம் விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆனந்தராஜ், ஜான் டேவிட் குமார், ராபி ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story