முதியவர் கொலை வழக்கில் விவசாயி கைது


முதியவர் கொலை வழக்கில் விவசாயி கைது
x

ஒரத்தநாடு அருகே முதியவர் கொலை வழக்கில் விவசாயியை போலீசார் கைது செய்தனர்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

முதியவர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள குலமங்கலம் ஜவுளி தெருவை சேர்ந்தவர் கைலாசம் (வயது72). இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள சடையன் ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமன் (55) என்பவரின் நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெயராமனுக்கும், கைலாசத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் கைலாசத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் மயங்கி கீழே விழுந்த கைலாசத்தை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் கைலாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.

விவசாயி கைது

இதுகுறித்து கைலாசத்தின் மகள் கோமதி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயராமனை தேடி வந்தனர். இந்த நிலையில் தலையாமங்கலம் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஜெயராமனை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story