பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்


பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

நூதன ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் செங்கமலை தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் முகமது அலி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பால் நிறுத்த போராட்டம்

இதையடுத்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தாத தமிழக அரசையும், பால்வளத்துறையையும், ஆவின் நிர்வாகத்தையும் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் தலையில் முக்காடு போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் ஒரு லிட்டருக்கு பாலுக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். தரமான கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணா காப்பீடு திட்டத்தில் மாறுதல் செய்து கறவை மாடுகளின் விபத்து மரணம், நோய் மரணம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாடுகள் வாங்க வங்கி கடனும், அதனை பராமரிக்க வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், பால்வளத்துறையையும், ஆவின் நிர்வாகத்தையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றனர்.


Next Story