பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரில் பேக்கரி கடையில் தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரில் பேக்கரி கடையில் தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x

பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரில் பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 43). இவர் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு முதல் அப்பகுதியில் தொடர்ந்து மழையும், மின்தடையும் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக பெரியபாளையம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

எனவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் கதவை திறக்க முயன்றனர். ஆனால், அரை மணி நேரமாக போராடியும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கடையின் இரும்பு கதவை உடைத்து திறந்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, தீ மள,மளவென கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த தேர்வாய் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போக்குவரத்து நிறைந்த பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த தீ விபத்தால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது? காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story