கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ: விலையுயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்


கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ: விலையுயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்
x

உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

கொடைக்கானல்,

'கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில், மேல்பள்ளம் என்னுமிடத்தில் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள, மளவென வனப்பகுதியில் பரவியது.

இதில் அங்கிருந்த விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகின. மேலும் காய்ந்த செடி, கொடிகளில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. தீப்பிடித்து எரிந்த இடத்தில், இரவை பகலாக்கியதை போல் அக்னி ஜூவாலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கொடைக்கானல் வனச்சரகர் குமரேசன் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

இதையடுத்து தீ பிடித்து எரியும் பகுதிக்கு, எதிர் திசையில் இருந்து தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர். தீத்தடுப்பு கோடு என்பது, வனப்பகுதியில் சுமார் 20 அடி அகலத்துக்கு பள்ளங்கள் வெட்டப்பட்டு மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் செய்வதாகும்.


Next Story