சென்னையில் கஞ்சா போதையில் போலீசார் மீது தாக்குதல் - 3 பேர் கைது


சென்னையில் கஞ்சா போதையில் போலீசார் மீது தாக்குதல் - 3 பேர் கைது
x

முக்கிய குற்றவாளியான உமாபதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஏற்பட்ட தகராறில் சின்னா மற்றும் தினேஷ் ஆகிய இருவரை வெட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீஸ்காரர்கள் 2 பேர், உமாபதியை நேரில் சென்று விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர். அப்போது உமாபதி மற்றும் அவரது நண்பர்கள் 2 போலீஸ்காரர்களையும் கல் வீசியும், கையாலும் சரமாரியாக தாக்கினர்.

மேலும் உமாபதியின் நண்பர் ஒருவர், பீர் பாட்டிலை உடைத்து தனது உடலில் கீறிக்கொண்டார். மேலும் போலீசாரையும் குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் சேர்ந்து போலீஸ்காரர்கள் மீது பெரிய கற்களை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தப்பி ஓடிய கஞ்சா வியாபாரிகளான உமாபதி மற்றும் அவரது நண்பரை கண்ணகி நகர் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரேம், ராகுல் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 3 பேரை கண்ணகி நகர் போலீசார் கைதுசெய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான உமாபதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story