தமிழ்நாடு பெயரின் வரலாறு தெரியாமல் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - வைகோ


தமிழ்நாடு பெயரின் வரலாறு தெரியாமல் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - வைகோ
x

“தமிழ்நாடு பெயரின் வரலாறு தெரியாமல் கவர்னர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. கூறினார்.

இதுதொடர்பாக அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு பெயர்

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்ற கவர்னரின் சர்ச்சையான கருத்து குறித்து கேட்கிறீர்கள். தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மசோதா கொண்டு வந்தனர். அதை தி.மு.க. ஆதரித்தது.

பின்னர் அண்ணா முதல்-அமைச்சரான பிறகு, அவர் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார். தமிழ்நாடு என்பது இலக்கியங்களில் இருக்கிறது. சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் தமிழ்நாடு என்று தான் இருக்கிறது. எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக்கொண்டு நான் தமிழ்நாடு என்று சொல்வேன். நீங்கள் வாழ்க என்று கூற வேண்டும் என்று அண்ணா சொன்னார். காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்களும் அண்ணா தமிழ்நாடு என்று சொல்ல வாழ்க என்று 3 முறை சொன்னார்கள்.

யாரும் மாற்ற முடியாது

இப்படி ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு தெரியாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி உள்ளார். அவருக்கு பின்னால் சங் பரிவார் சக்திகள் இருந்து அவரை இயக்கி கொண்டிருக்கிறது. அவர்களின் கருவியாக, அவர்களின் போலித்தனமான ஏஜெண்டாக கவர்னர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

அவரது பெயரையும் மாற்றிக்கொண்டால் ரொம்ப நல்லது. தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது, அது சரித்திரத்தில் இடம் பெற்றது. தியாகத்தால் சூட்டப்பட்ட பெயர் ஆகும்.

இவ்வாறு வைகோ கூறினார்.


Next Story