விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி


விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 11:55 AM GMT)

விபத்தில் இறந்த கார் டிரைவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்

கார் டிரைவர் சாவு

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது40). கார் டிரைவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவை கோட்டத்திற்கு சொந்தமான அரசுபஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது மனைவி ரூபா நஷ்டஈடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, ரூபாவுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

அரசுபஸ் ஜப்தி

ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது. எனவே ரூபா தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்து 22 ஆயிரத்து 178 வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கோவை கோட்டத்திற்கு சொந்தமான அரசுபஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நேற்று கோர்ட்டு அமீனா ரவி முன்னிலையில் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு புறப்பட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாமக்கல் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story