நாகர்கோவில் பஸ்நிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் பிரசாரம்; பொதுமக்கள் பாராட்டு


நாகர்கோவில் பஸ்நிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் பிரசாரம்; பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 14 Sep 2022 8:59 PM GMT (Updated: 15 Sep 2022 4:46 AM GMT)

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாலிபர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

கன்னியாகுமரி

நூதன பிரசாரம்

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெனிஷ் (வயது 25), சுமிஷ் (25). பட்டதாரியான இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டனர். அதன்படி வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணை ஒழிப்பு குறித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணமகன்கள் கோலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நூதன முறையில் ஜெனிஷ், சுமிஷ் ஆகியோர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பதாகை அணிந்திருந்தனர். அதில், மணப்பெண் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை என்றும் சாதி, மதம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

பொதுமக்கள் பாராட்டு

மேலும் பஸ் நிலையத்தில் இருந்த வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது எனவும், பணத்தை விட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் எனவும் தெரிவித்தனர்.

இவர்களது நூதன விழிப்புணர்வு பிரசாரம் பஸ் நிலையத்தில் இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதே சமயத்தில் பொதுமக்கள் அவர்களின் செயலையும் பாராட்டினர்.


Next Story