குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 411 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 56 மனுக்கள் பெறப்பட்டன.

வாழ்வாதாரம் பாதிப்பு

கூட்டத்தில் மாயனூர் வட்டார மாட்டு வண்டி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எங்களின் தொழில் காவிரி ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியோடு மாட்டு வண்டியில் மணல் அள்ளி உள்ளூர் தேவைக்கும், அரசு கட்டுமான பணிகளுக்கும் விற்பனை செய்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்தோம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பிழைப்புக்கு வழியின்றி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில், எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு நாங்களும், எங்கள் தொழிலை சேர்ந்தவர்களும் பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர் சேமிப்பு கிடங்கில் நடை ஒன்றுக்கு ரூ.800 செலுத்தி மணல் பெற்று கொள்கிறோம். பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட ேவண்டும்

கரூர் பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-கரூரில் கடந்த 22-ந்தேதி 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களான கரூர் பஸ் நிலையம் முன்புறம், பின்புறம், காமராஜ் மார்க்கெட் அருகில், மூலிமங்கலம், வெங்கமேடு, ராஜபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பஸ்நிலையம், பேரூராட்சி அலுவலகம், அரசு அலுவலகங்கள் அருகே உள்ள கடைகளை உடனடியாக மூட வேண்டும். சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பெருமாள் உள்பட சிலர் பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டாம் என்று மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story