4 மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை.... தள்ளிவைக்கப்படுகிறதா அரையாண்டு தேர்வு..?


4 மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை.... தள்ளிவைக்கப்படுகிறதா அரையாண்டு தேர்வு..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Dec 2023 12:09 AM GMT (Updated: 6 Dec 2023 6:51 AM GMT)

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளதாகவும், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 11-ந்தேதி ஆரம்பித்து நடத்தப்பட இருப்பதாகவும் அரையாண்டு தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றுவிட்டது. இதனால் குடியிருப்புகளில் இருக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நிவாரண முகாம்களாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்து, இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்.

அந்தவகையில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை அரையாண்டு தேர்வு தொடங்க உள்ள நிலையில், அந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெற்றவுடன், அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story