சென்னையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை


சென்னையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை
x

சென்னையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது பற்றி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரைகள் வழங்கி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சுழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.

* பட்டாசுக்கள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கி உள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

* சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 'டெசிபல்' அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.

* பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்க கூடாது.

* பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாட கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

* பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே இவ்வாறு செய்யக் கூடாது.

* குடிசைப் பகுதிகளிலும், மாடி கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்க கூடாது. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.

* பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள். எக்காரணத்தை கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வான வெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்த பின்னர் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்க கூடாது.

* பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்க கூடாது.

* பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுபத்தி கொளுத்தி வைக்க கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுபத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்க வேண்டும்.

* கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம். அதை தவிர்க்க வேண்டும்.

* தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை மற்றும் தீயணைப்பு-மீட்புத்துறை அவசர உதவி எண்-112, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்சு எண்-108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறி உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்ததற்கு எதிராக 184 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 848 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று சென்னை போலீஸ்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story