திருப்பூரில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை


திருப்பூரில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2023 4:04 PM GMT (Updated: 28 Jun 2023 6:38 AM GMT)

திருப்பூரில் மகனின் கடன் பிரச்சினையால் மனம் உடைந்து தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவனம்

திருப்பூர் எம்.எஸ்.நகர் நீதியம்மாள் நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 54). இவருடைய மனைவி அமலோற்பவமேரி (45). இவர்களுடைய மகன் சார்லஸ் (28). இவர்களின் சொந்த ஊர் சேலம் ஆகும். சார்லஸ் பனியன் ஜாப்ஒர்க் நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். தொழில் சரியாக அமையாததால் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பனியன் நிறுவனத்தை மூடிவிட்டார்.

இந்த நிலையில் சார்லஸ் தனது மனைவியுடன் வீரபாண்டிக்கு சென்று தனியாக வசித்து வந்தார். அவருக்கு ரூ.15 லட்சம் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. சார்லசுக்கு கடன் கொடுத்தவர்கள் அவரது தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பிக்கொடுப்பதாக தெரிவித்து வந்துள்ளனர்.

கடன் பிரச்சினை

கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் சார்லஸ் திணறி வந்துள்ளார். இதனால் அலெக்சாண்டரிடம் சென்று கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூத்தமகன் இறந்து விட்டார். அந்த சோகத்தில் இருந்த தம்பதிக்கு, இளையமகனின் கடன் பிரச்சினை மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இதனால் அவர்கள் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்றனர். ஆனால் நேற்று காலை 9 மணிக்கு மேலாகியும் வீட்டில் இருந்து இருவரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சார்லசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தம்பதி தற்கொலை

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது வீட்டுக்குள் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. இதில் அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். மயங்கிய நிலையில் கிடந்த அமலோற்பவமேரியை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், மகனின் கடன் பிரச்சினையால் மனம் உடைந்து தந்தையும், தாயும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story