"தீர்ப்பை நினைத்து இரவெல்லாம் தூக்கமில்லை" "உதட்டில் தான் சிரிப்பு..உள்ளத்தில் இல்லை" - ஈபிஎஸ் உருக்கமான பேச்சு


தீர்ப்பை நினைத்து இரவெல்லாம் தூக்கமில்லை உதட்டில் தான் சிரிப்பு..உள்ளத்தில் இல்லை - ஈபிஎஸ் உருக்கமான பேச்சு
x

அ.தி.மு.க.வை அடக்க முடக்க நினைத்த எட்டப்பர்கள் தி.மு.க.விற்கு பி டீமாக இருந்தவர்கள் முகத்திரை தற்போது சுப்ரீம் கோர்ட்டின்தீர்ப்பின் மூலம் கிழிக்கப்பட்டு உள்ளது.

மதுரை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டும்., அ.தி.மு.க.வின் 51வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும் 51 ஏழை எளிய ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணமாக அம்மா பேரவை செயலாளர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் 51 ஜோடிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயாகுமரின் மகளும் ஒருவராவர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திருமண மேடை.மொய் எழுதுமிடம்., உணவு அருந்துமிடம் என அமைக்கப்பட்டு இருந்தது. விழாவிற்கு சேலத்திலிருந்து சாலைமார்கமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கல சிலைகளுக்கு மாலை அணிவித்து 51 ஜோடிகளுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

திருமண விழா மேடையில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர். தலைவர்கள் மேடையில் இருக்கும்போதே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்ததால், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் உற்சாகமடைந்தனர்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருப்பதற்கு ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

இந்த திருமண விழா மேடையில் ஆர்பி உதயகுமார் பேசுகையில், "இந்த திருமண விழா மேடைக்கு வரும்போது அனைவரும் மவுனமாக இருந்தோம். எடப்பாடியார் மேடைக்கு வரும்போது பின்னணியில் மக்களின் முதல்வர் என்ற பாட்டு ஒலித்தது. அந்த பின்னணியில் அவர் நடந்து வருவதை பார்க்கும்போது அழகர் நடந்து வருவது மாதிரி இருந்தது. அதனை உண்மை என்று மெய்ப்பித்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. அம்மா நம்மோடு இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக, தெய்வ வாக்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது.

அம்மாவை வேண்டி நின்ற எங்களுக்கு இந்த தீர்ப்பு உற்சாகத்தை அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களும் எடப்பாடியார் தான் முதல்வர் என்கிற தீர்ப்பினை விரைவில் அளிப்பார்கள். அதன் முதல் வெற்றியாக ஈரோடு இடைத்தேர்தல் அமையும்.

முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவர் எடப்பாடியாருக்கு எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். சூப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்புக்கு மத்தியில் 51 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார்" எனப் புகழ்ந்து பேசினார் ஆர்பி உதயகுமார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு.ராஜேந்திர பாலாஜி,செல்லூர் ராஜு,அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள்., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்வில் குறைந்தபட்சம் 50,000 பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உணவு அருந்துவதற்கு 6 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து காலை 7.00 மணி முதல் பந்தி பரிமாறப்பட்டது.

அதே போல் மொய்-டெக் என்ற பெயரில் 102 கணினி மற்றும் பணம் என்னும் இயந்திரத்துடன் மொய் எழுதும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள்., தொண்டர்கள்., நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்று இந்த திருமண விழா நடைபெற்றது. புதிதாக திருமணமான 51 ஜோடிகளுக்கும் கல்யாண சீர்வரிசையாக 1லட்சம் மதிப்பிலான கட்டில்., பீரோ., பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்கப்பட்டது.

"தீர்ப்பை நினைத்து இரவெல்லாம் தூக்கமில்லை" "உதட்டில் தான் சிரிப்பு..உள்ளத்தில் இல்லை" - ஈபிஎஸ் உருக்கமான பேச்சு

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசும் போது கூறியதாவது:-

இன்றைக்கு அ.தி.மு.க.வின் 51 வது பொன்விழாவை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் சமத்துவ சமுதாய திருமணவிழா நடைபெறுகிறது. தீர்ப்பு வருவதை முன்னிட்டு நான் நேற்று கலங்கி போயிருந்தேன்., அச்சத்துடன் இருந்தேன் தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதை எண்ணி இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன். நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

ஆனால் இன்றைக்கு அம்மா கோவிலில் வேண்டிய சில நிமிடத்தில் நல்ல தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது. அம்மாவின் ஆன்மவாக அம்மா கோவிலில் நம் தலைவர்கள் உண்மையான தெய்வமாக குடிகொண்டுள்ளனர். தெய்வ சக்தி உள்ள கோவில் அம்மா கோவில்.! தீர்ப்பின் மூலம் தெய்வ சக்தி உள்ள கோவில் என உறுதி செய்யப்படுகிறது.

இதுவரை எங்களை வைத்து லாபம் பாத்த உடகங்கள் அனைவரும் இனிமேலாவது நாட்டுமக்களுக்கு நல்ல செய்திகளை வழங்குங்கள். அதிமுகவை பொறுத்தவரை நல்லது செய்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கிறது.

அ.தி.மு.க.வை அடக்க முடக்க நினைத்த எட்டப்பர்கள் தி.மு.க.விற்கு பி டீமாக இருந்தவர்கள் முகத்திரை தற்போது சுப்ரீம் கோர்ட்டின்தீர்ப்பின் மூலம் கிழிக்கப்பட்டு உள்ளது.

இனிமேல் அதிமுக இயக்கம் ஒன்றரைகோடி தொண்டர்களின் தலைமையின் கீழ் இயங்கும். அதிமுக மக்களுக்காக உழைக்கும் இயக்கம்., ஒரு குடும்பத்திற்காக உழைக்கும் இயக்கமல்ல.!

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் மூலம் உயிரூட்டப்பட்டுள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் அதிமுக தொண்டர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அதிமுகவின் வீரத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவின் தொண்டர்கள் சொந்த காலில் நிற்கிறார்கள்.

திருமங்கலம் பார்முலா நடைபெற்ற இடத்தில் இருந்து பேசுறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக மட்டுமல்லாது இந்தியாவிலேயே யாரும் செய்யாததை திமுக அரசு வாக்காளர் மக்களை அடைத்து வைத்துள்ளது.

மாநில மத்திய தேர்தல் ஆணையத்திடமும். மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டது யாரும் எதுவும் தடுக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை மக்கள் விரோத செயல்.

ஆடுகளை அடைத்து வைப்பது போல் வாக்காளர்கள் அடைக்க வைத்து அவர்களுக்கு தேவையானதை அனைத்தும் செய்து கொடுத்து வாக்கு சேகரிக்கீறார்கள். வாக்காளர்கள் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள். வாக்காளர்கள் தான் நீதிபதிகள் நாங்கள் அவர்களை நம்புகிறோம். ஆறு மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் வாக்காளர்களை அடைத்து வைத்து சித்தரவதை செய்கிறார்கள் என தெரிவித்தார்.


Next Story