கேப்டன் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் - இயக்குநர் அமீர்


கேப்டன் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் - இயக்குநர் அமீர்
x

பல்வேறு பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை,

உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவருடைய மனைவி பிரேமலதா எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பல பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் அமீர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், திரையுலகில் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை, ஏழைகளாய் உழல்வோரை கண்டுளம் பதைத்த வள்ளலாரைப் போல, நம்மிடையை திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர்,

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள, எனும் குறள் வழி வாழ்ந்த ஈகைத் தமிழன் ,கேப்டன் விரைவில் பூரண உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன், என்று கூறியுள்ளார்.


Next Story