15 மணி நேரத்தில் 22 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர் : தமிழக வெற்றிக் கழகம்


15 மணி நேரத்தில் 22 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர் : தமிழக வெற்றிக் கழகம்
x

2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார் .இருப்பினும் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் செயலியே முடங்கும் அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தை திகைக்க வைத்திருக்கிறது

சென்னை,

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேருவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்த நடிகர் விஜய், கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக பதிவு செய்ய முயன்றுள்ளனர். இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை இணையதளம் முடங்கியது. சில மணி நேரம் கழித்து இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகத்தில் விஜயின் ரசிகர்கள் ஆர்வமுடன் உறுப்பினராக பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், 15 மணி நேரத்தில் கிட்டதட்ட 22 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக கட்சியில் இணைந்துள்ளனர்.

மேலும் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் உறுப்பினராக முடியாதவர்களுக்கு , உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கவும் முகாம்கள் நடத்த திட்டமிட்டு உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக சேர்த்தவர்களுக்கு உறுதிமொழியில் உள்ள கொள்கை, கோட்பாடு, இலக்குகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்க உள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார் .இருப்பினும் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் செயலியே முடங்கும் அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தை திகைக்க வைத்திருக்கிறது


Next Story