திருவள்ளூரில் லாரியில் ஏற்றி வந்த ராட்சத இரும்பு தூண்கள் நடுரோட்டில் சரிந்தன - போக்குவரத்து பாதிப்பு


திருவள்ளூரில் லாரியில் ஏற்றி வந்த ராட்சத இரும்பு தூண்கள் நடுரோட்டில் சரிந்தன - போக்குவரத்து பாதிப்பு
x

திருவள்ளூரில் லாரியில் ஏற்றி வந்த ராட்சத இரும்பு தூண்கள் நடுரோட்டில் சரிந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிக்காக ராட்சத அளவிலான இரும்பு தூண்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

அந்த லாரி நேற்று காலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது திடீரென ராட்சத தூண்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த இரும்பு சங்கிலி அறுந்தது.

இதன் காரணமாக அந்த ராட்சத தூண்கள் சாலையில் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரியின் பின்பக்கத்தில் வாகன ஓட்டிகள் யாரும் வராததால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பெரிய அளவிலான ராட்சத இரும்பு தூண்கள் சாலையின் நடுவில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த ராட்சத இரும்பு தூண்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்று வழியில் திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story