தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை


தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 5 April 2024 10:44 AM GMT (Updated: 5 April 2024 10:46 AM GMT)

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் அவிநாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் 'அ' பிரிவு, ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் வீடுகள் மற்றும் அவரின் பெட்ரோல் பங்கு, ஆர்.ஓ., வாட்டர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.முருகனின் அலுவலகம், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story