டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு..!!


டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு..!!
x
தினத்தந்தி 14 Sep 2023 5:00 PM GMT (Updated: 14 Sep 2023 5:48 PM GMT)

டெங்கு பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

* மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணிப்பது முக்கியம். குறிப்பாக டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

* டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக இருந்து வரும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை தடுக்க தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் இருக்க வாரத்துக்கு ஒருமுறை அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

* ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் எவை? என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

* அனைத்து உள்ளாட்சிகளிலும் கொசு ஒழிப்பு மருந்துகளை இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ஏடிஸ் கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் திறந்த வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் கேரி பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்றவும், டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டுகளை உருவாக்க அரசு மருத்துவமனை டீன் மற்றும் சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* டெங்கு பரிசோதனைக்கான உபகரணங்கள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு பாதிப்புக்கான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

* ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story