வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x

தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

மதுரை,

தமிழகத்தில் ஒருபுறம் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மதுரையில் 2-வது நாளாக கோடை மழை பெய்து வருகிறது. கோரிப்பாளையத்தில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். அதேபோல, மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரால் பாடல் குழுவினர் வந்த வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. இதையடுத்து வாகனத்தில் சிக்கிய 3 பேரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில், மதுரையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீரும் ஆற்றுக்கு வருவதால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story