வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்


வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
x

வாணியம்பாடியில் இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

வாணியம்பாடியில் இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதில் ஏற்படும் நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளும் உயிரிழப்புகளும் தடுக்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு மனித நேயத்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யப்படவேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில் நெரிசல் ஏற்படுவதும், உயிரிழப்புகள் நிகழ்வதும் தவிர்க்க முடியாதவை.

எத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக இருந்தாலும், அரசின் அனுமதி பெற்று, காவல்துறையின் பாதுகாப்புடன் வழங்கப்பட வேண்டும். உதவி வழங்கும் இடத்தில் ஒரு நேரத்தில் 200 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசு தடை செய்ய வேண்டும். வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story