சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி வேதனை


சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி வேதனை
x
தினத்தந்தி 14 Dec 2023 3:30 AM GMT (Updated: 14 Dec 2023 5:44 AM GMT)

இனிமேல் எந்த குடும்பமும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி கோர்ட்டு கதவுகளை தட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கூறியுள்ளது.

மதுரை,

திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் இஸ்லாமியர்களின் பொது அடக்க ஸ்தலத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வகித்து வருகிறது. அங்கு தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுவர்களுக்கு தனி அடக்க ஸ்தலம் இருந்தது. அந்த அடக்க ஸ்தலம் குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து, தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுபவர்களில் யாராவது இறந்தால், அவர்களின் உடல்களை பொது அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்ய சுன்னத்வால் ஜமாத் அனுமதி மறுத்தது. இது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், "சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் சாதி, மதம் கடந்து உடல்களை அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக அடக்க ஸ்தலங்கள் உள்ளன. இந்துக்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் தனியாக மயானங்கள் உள்ளன. பிற மதத்திலும் இந்த பாகுபாடு உள்ளது.

இறந்தவர்களின் உடல்களை உரிய நேரத்தில் அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது சடலத்தின் கண்ணியத்தை பாதிப்பதோடு, சுகாதார பாதிப்பும் ஏற்படும். இறந்தவர்களின் உடல்களை உரிய பழக்க வழக்கப்படி அடக்கம் செய்யாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினர் அடையும் மன உளைச்சலை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்ய தூண்டப்பட்டது மரணத்தை விட சோகமானது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், கிராம மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆகியோரை கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. அனைவரையும் சமமாக கருதி நம்பிக்கை, பழக்க வழக்கத்தை பின்பற்றி இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும். இனிமேல் எந்த குடும்பமும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி கோர்ட்டு கதவுகளை தட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Next Story