சிங்கம் பட சூர்யா பாணியில் மீசையுடன் வந்த போலீஸ்காரருக்கு நீதிபதி கண்டிப்பு..!


சிங்கம் பட சூர்யா பாணியில் மீசையுடன் வந்த போலீஸ்காரருக்கு நீதிபதி கண்டிப்பு..!
x

ஊட்டி கோர்ட்டுக்கு வழக்கு விசாரணைக்காக வந்த போலீஸ்காரர் ‘சிங்கம்’ சூர்யா பாணியில் மீசை வைத்திருந்தார். அவரை நீதிபதி கண்டித்ததால் உடனடியாக சரிசெய்தார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அம்பலமூலா போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் கண்ணன் என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை ஒரு வழக்கு சம்பந்தமாக ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் வந்து ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது ராஜேஷ் கண்ணன் சிங்கம் பட கதாநாயகன் சூர்யா போல் பெரிய கடா மீசை வைத்திருந்தார். இதைப் பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதி முருகன், மீசை வைக்க உயர் அதிகாரிகளிடம் முறையாக தகவல் தரப்பட்டுள்ளதா என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் மீசையை சரி செய்யுமாறும் சற்று கண்டிப்புடன் கூறினார்.

இதனால் திடீரென அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் ராஜேஷ் கண்ணன் செய்வதறியாது திகைத்தார். இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக வெளியே சென்று அருகில் உள்ள அழகு நிலையத்தில் தனது மீசையை முறையாக வெட்டி சரி செய்து மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தார்.

இந்த சம்பவம் காரணமாக கோர்ட்டு வளாகத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இது போலீஸ் துறை வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், பொதுவாக போலீஸ் துறையில் அடையாள அட்டையில் உள்ளவாறு தான் நமது தோற்றம் இருக்க வேண்டும். அதைத் தாண்டி, போலீசார் மொட்டை எடுப்பதாக இருந்தாலோ, பெரிய அளவில் மீசை வைப்பதாக இருந்தாலோ அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து அந்த போலீஸ்காரருக்கு அறிவுரை தரப்பட்டு உள்ளது என்றார்.


Next Story