சென்னை ஐகோர்ட்டு, ரிசர்வ் வங்கியை டிரோன் கேமரா மூலம் படம்பிடித்த கர்நாடகா வாலிபர் - போலீசார் விசாரணை


சென்னை ஐகோர்ட்டு, ரிசர்வ் வங்கியை டிரோன் கேமரா மூலம் படம்பிடித்த கர்நாடகா வாலிபர் - போலீசார் விசாரணை
x

சென்னை ஐகோர்ட்டு, ரிசர்வ் வங்கியை டிரோன் கேமரா மூலம் படம்பிடித்த கர்நாடகா வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் நேற்று பகலில் ஐகோர்ட்டு மற்றும் ரிசர்வ் வங்கி கட்டிடத்துக்கு மேலே டிரோன் ஒன்று மர்மமான முறையில் நீண்டநேரம் பறந்தபடி இருந்தது. இதை பார்த்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார், சட்டக்கல்லூரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சட்டக்கல்லூரி போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி இதுபற்றி விசாரித்தார்கள்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற வாலிபர் மேற்படி டிரோனை பறக்கவிட்டது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர் பறக்கவிட்ட டிரோன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, சென்னை பெரம்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றை டிரோன் மூலம் படம் எடுத்ததாகவும், பின்னர் ஐகோர்ட்டு மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற முக்கியமான கட்டிடங்களை படம் எடுத்ததாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். அவர் மீது உரிய அனுமதி இல்லாமல் டிரோனை பறக்க விட்டதற்காக சட்டக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் பயன்படுத்திய டிரோன் கேமராவில் சென்னையில் எந்தெந்த கட்டிடங்களை படம் பிடித்துள்ளார்? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story