கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வக்கீல் - அமைச்சர் ரகுபதி தகவல்


கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வக்கீல் - அமைச்சர் ரகுபதி தகவல்
x

கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வக்கீல் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த நபர் தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கருக்கா வினோத், முன்னதாக பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்திய போது அவரை பிணையில் எடுத்தவர் பாஜக வக்கீல் முத்தமிழ் செல்வகுமார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். முத்தமிழ் செல்வகுமாருக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டதை குறிப்பிட்டு அமைச்சர் ரகுபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டியளித்த வக்கீல் முத்தமிழ் செல்வகுமார், "வக்கீல் என்ற முறையில் பல கட்சியினரை பிணையில் எடுத்துள்ளேன். அனைத்து கட்சியினரின் வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளேன். தற்போது நான் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. எனக்கும் கருக்கா வினோத்துக்கும் நேரடி தொடர்பில்லை" என்று கூறியுள்ளார்.


Next Story