கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு ஐகோர்ட்டில் தாக்கல்


கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு ஐகோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 12 Jan 2024 9:06 AM GMT (Updated: 12 Jan 2024 10:23 AM GMT)

கோடநாடு வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசுவதற்கு கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்றும் வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் கோர்ட்டு சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகை பாலன் கடந்த 4-ம் தேதி அவரிடமிருந்து சாட்சியத்தை பதிவு செய்தார்.

இந்தநிலையில் சாட்சியத்தை பதிவு செய்தது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் கார்த்திகை பாலன் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்தார். விரைவில் இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது.


Next Story